குஜராத் இடைத்தேர்தல் களம்: பாஜக- காங்கிரஸ் நேருக்கு நேர் மோதல்!!
அகமதாபாத்: குஜராத்தில் 9 மாநில சட்டசபை தொகுதிகளும் ஒரு லோக்சபா தொகுதிக்குமான இடைத்தேர்தல் பிரசார களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
குஜராத்தில் 10 தொகுதிகளுக்கு வரும் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா மற்றும் எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி ஆகியவை நேருக்கு நேராக மோதுகின்றன.
குஜராத் முதல்வராக இருந்த மோடி தமிழர்கள் அதிகம் வாழும் மணி நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் வாரணாசி தொகுதியை மட்டும் தக்கவைத்து கொண்டு வதோதரா லோக்சபா தொகுதி மற்றும் மணி நகர் சட்டசபை தொகுதிகளை மோடி ராஜினாமா செய்தார். இதனையடுத்து வதோதரா தொகுதி மற்றும் மணி நகர் உட்பட 9 சட்டசபை தொகுதிகளிலும் வரும் 13-ந் தேதி இடைத்தேர்தல நடைபெற உள்ளது.
இத்தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் பீகார் உள்ளிட்ட 4 மாநில சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதனால் அக்கட்சியினர் மிகவும் கவனமுடன் பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
அதேபோல் 4 மாநில இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பெருமிதத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக காங்கிரஸும் வியூகம் வகுத்து பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. தற்போது எம்ல்ல மெல்ல சூடு பிடிக்கும் பிரசாரத்தில் ஓரிரு நாட்களில் அனல் பறக்கலாம்.