சாமானிய மக்கள் பால் வாங்க தவிக்கும் நிலையில்... பாஜக கவுன்சிலருக்கு பாலபிஷேகம்!
பனாஜி: சாமானிய மக்கள் பால் வாங்க தவித்து வரும் நிலையில், கோவாவில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் ஒருவருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் கடந்த 27-ம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் கிஷோர் செட் வெற்றி பெற்றார். உடனே அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த மல்லிகார்ஜூனா கோயில் அருகில் அவரை ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்து குடம், அண்டா என்று பல்வேறு பாத்திரங்களில் வைத்திருந்த பாலை அவர் மீது ஊற்றினர்.
இந்த காட்சிகள் இணையத்தில் வீடியோவாக வெளியானது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ்,செய்தித் தொடர்பாளர் சுனில் காவ்தன்கர் கூறுகையில் "இன்றைய தேதியில், பா.ஜ.க தலைவர்கள் மட்டுமே பாலில் குளிக்க முடியும். சாமானிய மக்கள் பால் வாங்கக் கூட காசின்றி தவித்து வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகள் பாலில் குளிப்பதை ஏற்க முடியாது." என்று கூறியுள்ளார்.