கப்பல் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ஆண்டனி பதவி விலக வேண்டும்: பாஜக
டெல்லி: 11 மாதங்களில் 11 கடற்படை கப்பல் விபத்துகள் ஏற்பட்டுள்ளதற்கு பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
மும்பையில் வெள்ளியன்று ஏற்பட்ட கப்பல் விபத்தில், கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். துறைமுக அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தையும், கடற்படை அதிகாரி மரணத்தையும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த விபத்து குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
கடற்படையில்"கடந்த 11 மாதங்களில் 11 விபத்துகள் நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய விவகாரம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முற்றிலுமாக கடற்படை மீது கவனம் செலுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதற்குப் பொறுப்பேற்று, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி உடனடியாக பதவி விலக வேண்டும்" என்றார்.
போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் காலாவதியானவை என்று குற்றம்சாட்டிய அவர், "பாதுகாப்பு அமைச்சகம் தமக்குத் தேவையான அனைத்து நிதியைப் பெறுகிறது என்பது உண்மையல்ல. பாதுகாப்பு அமைச்சகம் தம்மிடம் உள்ள நிதியை சரியான முறையில் செலவிடவில்லை என்பதே உண்மை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இயலாமையைத்தான் இது காட்டுகிறது" என்றார்.
கடற்படை கப்பல் விபத்துகள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.
அதேபோல், இந்த விபத்துகள் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாஜக கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications