பாஜக டீல்.. வெளியேறினால் 2 லாபம்.. கெஜ்ரிவால் குற்றச்சாட்டை மறுத்த பாஜக! ‘பொய்யர்’ என விளாசல்!
அகமதாபாத் : குஜராத் தேர்தல் தொடர்பாக பாஜக டீல் பேசியதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியதை பாஜக கடுமையாக மறுத்துள்ளது. கெஜ்ரிவால் ஒரு பொய்யர் என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது.
பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றிற்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்று கட்சிகளும், தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குஜராத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக் கொண்டால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி அமைச்சர்கள் மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினும் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பாஜ தன்னிடம் பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

குஜராத் தேர்தல்
1995ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் தொடர்ந்து 6 முறை ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்த முறையும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு களமிறங்கியுள்ளது. பாஜகவின் கோட்டையைத் தகர்க்கும் திட்டத்தில் காங்கிரஸும் தேர்தல் பணியாற்றி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் இந்தக் கட்சிகளுக்கு டஃப் ஃபைட் கொடுத்து வருகிறது. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்தில் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது ஆம் ஆத்மி.

பாஜக டீல்
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், பாஜக முதலில் டெல்லி துணை முதல்வரான மணிஷ் சிசோடியாவை குறிவைத்தது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் அவரை முதல்வராக்குவதாக ஆசை காட்டியது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, தற்போது பாஜக என்னிடமே பேரம் பேசியது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து ஆம் ஆத்மி விலகிக் கொண்டால், அமைச்சர்கள் சிசோடியா, சத்தியேந்துர ஜெயின் ஆகியோர் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டினார்.

சுற்றி வளைத்து
பாஜகவில் இருந்து உங்களை யார் தொடர்பு கொண்டார்கள்? என்ற கேட்டபோது, எனக்கு மிக நெருக்கமான ஒருவர் மூலம்தான் இந்த தகவலை பாஜக எனக்கு அளித்தது. அவர்கள் நேரடியாக யாரையும் அணுகுவதில்லை. பலர் மூலமாக சுற்றிவளைத்துத்தான் அக்கட்சி தனது செய்தியை உரியவரிடம் கொண்டு சேர்க்கும். அப்படித்தான் பாஜகவின் செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்டது எனப் பதிலளித்தார்.

பாஜக மறுப்பு
டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வியால் எங்களைக் கண்டு பாஜக பயப்படுகிறது, அதனால் தான் குஜராத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக் கொண்டால் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணிஷ் சிசோடியாவை காப்பாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்தது என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

அப்பட்டமான பொய்
இதுதொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் கூறுகையில், இது அப்பட்டமான பொய். கெஜ்ரிவால் ஒரு பொய்யர். பாஜகவின் இமேஜை கெடுப்பதற்காக, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களையும், தேசத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு அன்னா ஹசாரேவைப் பயன்படுத்தி கொண்டார், டெல்லியில் ஆட்சியைப் பிடித்ததும் அவரை கைவிட்டுவிட்டார். கெஜ்ரிவால், ஆட்சியைப் பிடிப்பதற்காக யாரையும் தவறாக வழி நடத்துவார் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications