ரஜினிகாந்தின் தயவை நம்பி பாஜக இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு!
டெல்லி: தமிழகத்தில் ரஜினிகாந்தின் தயவை நம்பி ஒன்றும் பாஜக இயங்கவில்லை என்று தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தராஜான், "தமிழ்நாட்டில் கட்சியை பலமாக்க பாஜக பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து வருகின்றது.
அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லும் கட்சியாக பாஜக வளர்ந்தோங்கி வருகிறது. ரஜினிகாந்தின் தயவை நம்பி பாஜக இல்லை. பட்டிதொட்டி எல்லாம் பாஜகவை வளர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
நவம்பர் 1ஆம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தேசித்துள்ளோம். இந்த இலக்கை நிச்சயமாக எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
2016 இல் தமிழக ஆட்சியை பாஜக பிடிக்கும். தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.