காங். அபிஷேக் சிங்வி தலையை உருட்டி 'வங்கி கொள்ளையன்' நீரவ் மோடி விவகாரத்தை திசை திருப்புறாங்களாம்!
நீரவ் மோடியின் வங்கி மோசடியை திசைதிருப்ப காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தலையை உருட்டுகிறது பாஜக.
Recommended Video
டெல்லி: நாட்டை விட்டு தப்பி ஓடிய வங்கி கொள்ளையன் நீரவ் மோடி விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் அபிஷேக் சிங்வி பிரச்சனையை பாஜகவும் அதன் பரிவார ஊடகங்களும் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
மக்கள் பணம் ரூ11,400 கோடியை சுருட்டிவிட்டு இந்த தேசத்தை விட்டு கொள்ளையன் நீரவ் மோடி ஓடிப் போனதைப் பற்றி இங்கே ஆள்வோருக்கு அக்கறையே இல்லை. அதனால் நீரவ் மோடியிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி நகைகள், பணம் வாங்கியதாக பரபரப்பு கிளப்புகின்றனர்.
குஜராத்தைச் சேர்ந்த வைரவியாபாரி நீரவ் மோடி, பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,400 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். மத்திய பாஜக ஆட்சி காலத்தில்தான் ஏற்கனவே வங்கிகளை மோசடி செய்த விஜய் மல்லையாவும் ஓடிப் போனார்.
பணமதிப்பிழப்பை பயன்படுத்தி மோசடி
அதுவும் பாஜக அரசின் பணமதிப்பிழப்பு காலத்தில்தான் நீரவ் மோடி பெருமளவு பண மோசடி செய்திருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல இதை திசை திருப்பும் உத்தியை மத்திய அரசு செய்து வருகிறது.
நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
அதாவது உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வியின் மனைவி நீரவ் மோடியிடம் ரூ6 கோடிக்கு வைரம் வாங்கினார் என கூறி சில ஆதாரங்கள் இதோ என பாஜக ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அபிஷேக் சிங்வி குடும்பத்துக்கும் நீரவ் மோடி குடும்பத்துக்கும் வர்த்தக தொடர்பு உள்ளது என்கிறார்.
படுவேகமாக ஐடி நோட்டீஸ்
அத்துடன் நிற்கவில்லை.. உடனடியாக அபிஷேக் சிங்வி மனைவிக்கு படுவேகமாக வருமானவரித்துறை நோட்டீஸும் அனுப்பியுள்ளது. நாட்டின் பற்றி எரியும் பிரச்சனையாக இருக்கிறது ஓடிப்போன நீரவ் மோடி விவகாரம்.
ஓடிப் போன நீரவ் மோடி
நீரவ் மோடியின் முறைகேடுகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு கோப்புகள் அனுப்பி பல ஆண்டுகளாகிவிட்டது என்கிறது பஞ்சாப் நேஷனல் வங்கி. அப்போதெல்லாம் குறட்டை விட்டு தூங்கிவிட்டு கொள்ளையனை நாட்டை விட்டும் ஓடவைத்துவிட்டது மத்திய அரசு. இப்போது அபிஷேக் சிங்வி மனைவிக்கு இவ்வளவு வேகமாக நோட்டீஸ் அனுப்பும் மத்திய அரசு, கோப்புகள் வந்த போதே நீரவ் மோடியை மடக்கி காப்பு மாட்டியிருக்கலாமே... அதைச் செய்யாமல் விட்டுவிட்டு அடுத்தவர்கள் மீது பழியை போட்டுவிட்டு தப்பி ஓடுவது என்னதான் நியாயமோ?