திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா தேர்வு.. இன்று காலை பதவி ஏற்பு
அகர்த்தலா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் அவரின் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.
இவருடன் புதிய அமைச்சர்களும் மீண்டும் பதவி ஏற்க உள்ளனர். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் தேவ் நேற்று ராஜினாமா செய்தார். அங்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
பொதுவாக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களை மாற்றும் வழக்கத்தை பாஜக வைத்து வருகிறது. தேர்தலில் வெற்றிபெறும் வகையில் மாநில முதல்வர்களை பாஜக தொடர்ந்து மாற்றி வருகிறது.
முன்னதாக உத்தரகாண்டில் முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத் நீக்கப்பட்டு, அங்கு முதல்வராக புஷ்கர் சிங் தாமி நியமனம் செய்யப்பட்டார். இது சட்டசபை தேர்தலில் அக்கட்சிக்கு உதவியது. பாஜக இதே பார்முலாவை திரிபுராவில் தற்போது பயன்படுத்த உள்ளது.
அங்கு தேர்தல் நடக்க 8 மாதங்களே உள்ள நிலையில் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவ் ராஜினாமா செய்துள்ளார். அங்கு பாஜக ஐபிஎப்டி என்று Indigenous People's Front of Tripura கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகிறது.
இதன் மூலம் 25 வருடமாக திரிபுராவில் இருந்த இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி வீழ்த்தப்பட்டது. மீண்டும் அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சாகா 69 வயது நிரம்பியவர். இவர் ராஜ்ய சபா எம்பியாக இருந்தார். இந்த நிலையில் பாஜக சார்பாக முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு 5 எம்எல்ஏ இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதில் இவர் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வாய்ப்பு உள்ளதாககூறப்படுகிறது .
மாணிக் சாகா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் நரேன் ஆர்யா முன் அவரின் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.