குஜராத்தில் 25வருஷம் கூட தாக்குபிடிக்காத பாஜக தமிழகத்தில் நூறாண்டு திராவிடத்துக்கு முடிவுரை எழுதுமா?
குஜராத்தில் பிடியை இழந்து கொண்டிருக்கும் பாஜக, ஆலமரமாக இருக்கும் திராவிடத்தை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக சொல்கிறது.
Recommended Video

சென்னை/அகமதாபாத்: குஜராத்தில் கால் நூற்றாண்டுகாலம் கூட தாங்க முடியாமல் தள்ளாடத் தொடங்கிவிட்டது பாஜக.. இந்த கட்சிதான் தமிழகத்தில் நூறாண்டுகாலமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் திராவிட அரசியலுக்கு முடிவுரை எழுதப் போவதாக சபதமெடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் திராவிட அரசியல் என்பது வாக்கு வங்கிக்காக உருவானது அல்ல.. இந்தியா என்கிற கட்டமைப்பு உருவாவதற்கு முன்பே சமூக விடுதலை, சமூக நீதிக்காக உருவானதுதான் திராவிடம்.
மெத்த படித்த மேதைகள், சமூகத்தில் செல்வந்தர்களாக வலம் வந்தவர்கள் மண்ணின் மக்கள் மீது அக்கறை கொண்டு தங்களை சர்வபரி தியாகத்துக்கும் உள்ளாக்கிக் கொண்டு கட்டமைத்தது என்பது திராவிடம். திராவிடம் என்பது சென்னை கோட்டையில் கோலோச்சுவது அல்ல.

முன்னேறிய தமிழகம்
இன்று இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக, பண்பட்ட அமைதி தவழுகிற ஒரே நிலப்பரப்பாக தமிழகம் இருப்பதற்கு காரணம் திராவிடம். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கியது திராவிட இயக்கம். அதன் வழிவந்த அரசியல் கட்சிகள் சர்வதேசங்களிலும் ஜனநாயகத்தின் கறையான ஊழலிலும் சிக்கியிருக்கின்றன என்பது உண்மை.

குஜராத் ஊழல்கள்
திராவிட அரசியல் கட்சிகள்தான் ஊழல் செய்துவிட்டன என பாஜக சொல்கிறது. கால்நூற்றாண்டு காலம் பாஜக ஆளும் மாநிலத்தில் அதானிகளின் ஊழல்கள், அங்கன்வாடி ஊழல்கள், அரிசி ஊழல்கள், பெட்ரோலிய கார்ப்பரேஷன் ஊழல்கள் என ஏகப்பட்ட ஊழல்கள் காலந்தோறும் அணிவகுப்பு நடத்துகின்றன. அதுவும் இன்று பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போதுதான் இந்த ஊழல்களில் பல அரங்கேறின.

ஊழலில் திளைக்கும் கட்சிகள்
ஊழல் என்பது சமூக நோய்... அதற்கு திராவிட கட்சிகளும் விதிவிலக்கல்ல.. இந்துத்துவா கட்சிகளும் விதிவிலக்கல்ல.. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அல்லது அதிமுக என்பது நிலைபெற்றுவிட்ட ஒன்று. இதை ஜீரணிக்க முடியாமல்தான் குறுக்கு வழிகளில் பூனைக்குட்டிகளை பாஜக களம் இறக்கிக் கொண்டிருக்கிறது.

அதிமுக அழிவும் திமுகவின் இருப்பும்
தற்போதைய நிலையில் அதிமுகவுக்கு தலைமை இல்லை. அதன் செயல்பாடுகள் இனி எந்த காலத்துக்கும் எழுந்திருக்க முடியாத நிலைதான் என்பதை உருவாக்கிவிட்டது. தேர்தல் நடந்தால் திமுக வெல்லும். திராவிட அரசியல் தொடரும்.. இதைத் தடுக்கத்தான் தடியெடுத்தவர்களையெல்லாம் தனிக்கட்சி தொடங்க வைக்கிறது டெல்லி.

குஜராத்தில் தள்ளாடும் பாஜக
சரி... குஜராத் களநிலவரம் என்ன? கால்நூற்றாண்டுகாலம் பாஜக கோலோச்சுகிற மாநிலம்... ஆனால் மெல்ல மெல்ல பாஜகவின் அத்தியாயத்தை காங்கிரஸ் பேரியக்கம் முடிவுக்கு கொண்டு வருவதைத்தான் சட்டசபை தேர்தல்களும் இப்போதைய உள்ளாட்சித் தேர்தல்களும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. வாக்கு வங்கி அரசியல் பேசும் பாஜகவால் கால்நூற்றாண்டுகாலம் கூட குஜராத்தில் தாக்கு பிடிக்க முடியவில்லை.. இந்த பாஜகதான் மக்கள் விடுதலையை சாதித்து காட்டிய நூறாண்டுகால திராவிடத்துக்கு தமிழக மண்ணில் முடிவுரை எழுதும் என சூளுரைப்பது எத்தகைய விந்தை!












Click it and Unblock the Notifications