வெறுப்பு பேச்சு.. தேர்தல் நேரத்தில் ’தலைவலி’ ராஜஸ்தானில் கட்சியின் முக்கிய தலைவரை கழற்றிவிட்ட பாஜக
ஜெய்பூர்: ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது குருத்வாரர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சந்தீப் தயாமாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே இந்த வரலாற்றை மேலும் நீட்டித்து வெற்றி வாகை சூட பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நெருங்கி வந்து விட்ட நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டு இருக்கிறது.
இதனிடையே, ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான சந்தீப் தயாமா, சீக்கிய குருத்வாரா குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சன்தீப் தயமா கூறுகையில், 'இங்கு எத்தனை மசூதிகள், குருத்வாராக்கள் கட்டப்படுகிறது என்பதை பாருங்கள். இது நமது எதிர்காலத்திற்கு அல்சர் போன்றது. எனவே இதை வேரோடு பிடுங்கி எறிவது நமது கடமையாகும்" என்றார்.
குருத்வாரா குறித்த இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான அமரிந்தர் சிங்கும் கடும் கண்டனத்தை தெரிவிதததோடு, சந்தீப் தயாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, சந்தீப் தயாமாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்குவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications