மோடி 'பிசி': மகாராஷ்டிராவில் பாஜக அரசு பதவியேற்பு விழா 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக மைனாரிட்டி அரசை அமைக்க உள்ளது. புதிய முதல்வர் பதவியேற்பு விழா வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றாலும் அதற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜக கூட்டணி வைத்து அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தேர்தலுக்கு முன்பு தொகுதி பிரச்சனையில் கூட்டணியில் இருந்து சென்ற சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாஜக வரும் 30ம் தேதி மைனாரிட்டி அரசை அமைக்க உள்ளது. அன்றைய தினம் புதிய முதல்வர், சில அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடிக்கு அன்றைய தினம் வேறு வேலை உள்ளதால் பதவியேற்பு விழா 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழா முடிந்த பிறகு அமைச்சரவை குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறுகிறது.
இதற்கிடையே பாஜக நிதின் கட்காரி அல்லது தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரில் யாரை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜாக புதிய முதல்வரை இன்று தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜகவுக்கு 123 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க குறைந்தது 145 பேராவது வேண்டும். இந்நிலையில் முத்கேத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கோவிந்த் எம். ராத்தோட் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications