சோனியா மருமகன் வதேராவின் 'நிலக் கொள்ளை'க்கு உடந்தையாக இருந்த அதிகாரியை சஸ்பென்ட் செய்தது ஹரியானா!!
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரி தல்பீர்சிங்கை ஹரியானா அரசு அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது.
ராபர்ட் வதேரா, ஹரியானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியை பயன்படுத்தி அம்மாநிலத்தில் அரசு நிலங்களையும் ஏழைகளின் நிலங்களையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஹரியானாவில் பரீதாபாத்தில் உள்ள சிர்ஷி கிராமத்தில் அரசு நிலத்தை ராபர்ட் வதேரா மிக, மிக குறைந்த விலைக்கு வாங்கி இருப்பதும், இதற்காக அரசு ஆவணங்களை திருத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மத்திய கணக்குத் தணிக்கைத் துறை இது தொடர்பாக நடத்திய ஆய்வில் ஹரியானாவில் ஒரு இடத்தில் மட்டும் அரசு நிலத்தை வாங்கி முறைகேடாக விற்றதில் ராபர்ட் வதேரா சுமார் ரூ.50 கோடி சம்பாதித்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்று சமீபத்தில் ஹரியானாவில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு அறிவித்தது. இதனால் பயந்து போன ராபர்ட் வதேரா கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, தன் 7 ரியல் எஸ்டேட் நிறுவனங்களை மூடி விட்டார்..
இருப்பினும் ராபர்ட் வதேரா மோசடி குறித்து ஹரியானா மாநில அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. ராபர்ட் வதேரா செய்த மோசடிகளுக்கு குர்கான் - பரீதாபாத் மண்டலத்தில் நில நிர்வாக அதிகாரியாக இருந்த தல்பீர் சிங் பெரிய அளவில் உதவிகள் செய்தது தெரிய வந்தது. இதனால் அவர் கடந்த 11-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தல்பீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் அரியானாவில் கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.