மம்தாவுக்கு விழும் அடி! காரணம் காங்கிரஸ் தான்! கேப்பில் ஸ்கோர் செய்யும் பாஜக- மேற்கு வங்க பரபர சர்வே
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பாஜக அதிர்ச்சி அளிக்கும் என்று ஏபிபி சர்வே முடிவுகள் கூறுகிறது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெறுகிறது.

இதில் மேற்கு வங்கம் ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால், உத்தரப் பிரதேசம் (80) மற்றும் மகாராஷ்டிராவிற்கு (48) பிறகு அதிக இடங்களை அனுப்பும் மாநிலம் மேற்கு வங்கம். அங்கிருந்து மொத்தம் 42 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லவுள்ளனர்.
ஏபிபி சர்வே: இதற்கிடையே மேற்கு வங்கத்தில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து ஏபிபி மற்றும் சிவோட்டர் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அங்கு மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 20 இடங்களில் வெல்லும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் 20 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
காரணம்: எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ்- இடதுசாரிகள் தனியாகப் போட்டியிடுகின்றன. இப்படி இந்தியா கூட்டணியே தனித்தனியாகப் போட்டியிடுவதால் அங்கு வாக்கு வங்கி பிரிகிறது. இதுவும் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கணிசமான அளவு வாக்குகளை இழக்க காரணமாக இருக்கிறது.
மறுபுறம் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கணிசமான இடங்களை மேற்கு வங்கத்தில் பெற்ற நிலையில், அதை இந்தத் தேர்தலில் தக்கவைக்கும் என்றே ஏபிபி சர்வேயில் கூறப்பட்டு உள்ளது. 2014இல் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பாஜக, 2019இல் 2019-ல் 18-ஆக உயர்ந்தது. இந்த முறை அது மேலும் அதிகரித்து 20ஐ தொடும் என்பதை ஏபிபி சர்வே முடிவுகள் காட்டுகிறது.
அதிருப்தி: ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். திரிணாமுல் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக் பாலியல் துன்புறுத்தல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கியுள்ளார். இந்த சந்தேஷ்காலி சர்ச்சையை அங்கு பாஜக கையில் எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பலரும் இதை வைத்துத் தான் திரிணாமுல் அரசை விமர்சித்து வருகிறார்கள். இது தவிரப் பல திரிணாமுல் கட்சியினர் மீது இருக்கும் ஊழல் வழக்குகளும் அவர்களுக்குக் கடினமானதாக மாறுகிறது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 தொகுதிகள் இருக்கிறது. அனைத்து ஏழு கட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 42 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகின்றன. அதேபோல பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகின்றன. இது தவிர இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துக் களமிறங்குகின்றன.












Click it and Unblock the Notifications