உங்களை பலாத்காரம் செய்தால்கூட ஒன்றும் செய்ய முடியாது.. பெண் நிருபரை சீண்டிய பாஜக தலைவர்!
பெங்களூர்: "உங்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தால் எதிர்க்கட்சிகளான எங்களால் என்ன செய்ய முடியும்.." என்று பெண் நிருபரிடம் கேள்வி எழுப்பி, மாநிலம் முழுவதிலும் கடும் கண்டனத்தை வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளார், கர்நாடக மேலவை எதிர்க்கட்சி (பாஜக) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா.
பெங்களூரில் சமீபத்தில் ஓடும் வேனில் ஐடி ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த வாரம், திருடர்களை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனிடையே சப்-இன்ஸ்பெக்டர் இறுதி சடங்கில் பங்கேற்க சென்ற ஈஸ்வரப்பாவிடம் நிருபர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களின்போது, எதிர்க்கட்சியான பாஜக ஏன் வலுவான போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று பெண் நிருபர் ஒருவர் ஈஸ்வரப்பாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஈஸ்வரப்பா "இப்போ, நீங்க இருக்கீங்க. உங்களை யாரோ ஒருவர் கடத்தி சென்று பலாத்காரம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிர்க்கட்சியான எங்களால் அதை எப்படி தடுக்க முடியும்" என்று கூறினார்.
இந்த கருத்து, மாநிலம் முழுவதிலும் கொந்தளிப்பை உருவாக்கியது. பெண்கள் அமைப்பினர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் சித்தராமையாவும், ஈஸ்வரப்பா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதுபற்றி ஈஸ்வரப்பா தற்போது அளித்துள்ள விளக்கத்தில், "எனக்கும் நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். எனவே பெண்ணை இழிவு செய்யும் நோக்கத்தில் நான் பேட்டியளிக்கவில்லை. ஈஸ்வரப்பா எப்படிப்பட்டவர் என்பதை மாநில பெண்கள் நன்கறிவார்கள். அனைத்து பெண்களையும் சகோதரிகள் போலத்தான் பார்த்து நடந்து வருகிறேன். நான் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவால் ஒரு கட்டத்திற்கு மேல் எதையும் செய்ய முடியாது என்று சொல்ல வந்தேன். அதுதான் திரிந்து வீண் விவாதங்களை உருவாக்கிவிட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications