22 வருடமாக பலாத்காரம் செய்த பாஜக தலைவர்.. போலீஸில் புகார் கொடுத்த 55 வயதுப் பெண்!
அமிர்தசரஸ் : பஞ்சாப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ஸ்வரண் சலரியா என்பவர் மீது விமானப்பணிப் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் சலரியா தன்னை கடந்த 22 வருடங்களாக பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஸ்வரண் சலரியா (52). இவர் மீது மும்பை வகோலா பகுதி போலீஸ் ஸ்டேஷனில் 55 வயது முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர் பலாத்காரப் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில் அவர் கடந்த 1980ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சலரியா, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். தானும் சலரியாவும் இத்தனை வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்ததாககவும், சலரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது தொடர்பாக கேட்டபோது, அவர் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி, தாக்கியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சலரியா, மும்பையிலுள்ள தனது வீட்டில் குடியிருக்கும் அப்பெண், தன் சொத்தை அபகரிப்பதற்காக நாடகமாடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை தன் வசப்படுத்துவதற்காகவே பலாத்காரப் புகாரை அவர் தெரிவித்துள்ளதாகவும் சலரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சலரியா மீது போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.