கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம்: ஜனாதிபதி கையெழுத்திட பா.ஜ.க. எதிர்ப்பு!
டெல்லி: குற்றவாளி எம்.பி., எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட கூடாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த பா.ஜ.க. தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
குற்றவழக்கில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை உடனடியாக இழப்பார்கள் என கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, இந்த அவசர சட்டம் நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போது இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அவசர சட்டத்தில் கையெழுத்திடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, "தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தினை நாங்கள் எதிர்க்கிறோம். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடக் கூடாது என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.