பாஜக தலைவரின் "ஆடு.." திடீரென மாயமானதால் போலீசுக்கு ஓடிய தலைகள்! கடைசியா பார்த்தால் பகீர்! என்னாச்சு
ராய்ப்பூர்: பாஜக தலைவர் ஒருவருக்குச் சொந்தமான ஆடு ஒன்று திடீரென திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் நாய் அல்லது பூனையை தன் செல்ல பிராணிகளாக வளர்ப்போம். ஆனால், சிலர் அதைத் தாண்டி மற்ற விலங்குகளையும் கூட செல்ல பிராணிகளாக வளர்ப்பார்கள்.

அப்படி தான் சத்தீஸ்கரில் ரகுநாத்பூரில் உள்ள லுண்ட்ரா என்ற இடத்தில் பாஜக தலைவர் ஒருவர் ஆட்டை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
ஆடு மாயம்: 'ஷேரு' என்று அந்த ஆட்டிற்குப் பெயரிட்டு அதை வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஆடு திடீரென மாயமாகி இருக்கிறது. இதனால் பதறிய அந்த பாஜக உள்ளூர் தலைவர் அப்பகுதி முழுக்க தனது ஆட்டை தேடியுள்ளார். இருப்பினும், ஆடு கிடைக்காத நிலையில், இது தொடர்பாக அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
என்னாச்சு: அதன் பின்னரே அந்த ஆட்டை சிலர் கடத்தியது தெரிய வந்தது. ஆட்டை கடத்திய அந்த இரண்டு பேர் அதைக் கொன்று துர்க் பகுதியில் உள்ள இறைச்சி கடைக்காரரிடம் ரூ.27,000க்கு விற்றதும் தெரிய வந்தது. சொகுசு காரில் வந்து அவர்கள் ஆட்டை கடத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருந்தது.
சிசிடிவி கேமராக்களை வைத்த போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் ஆட்டை கடத்தி குர்சிபாரா என்ற இடத்தில் வைத்து அதைக் கொன்று இறைச்சியை விற்றது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அமீர் உசேன் மற்றும் ராஜா என்று இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போலீசார்: இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "அந்த இரண்டு குற்றவாளிகளும் இந்த பகுதியில் நோட்டம் விட்டுத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது ஏற்கனவே வழக்கும் உள்ளது. இதில் அமீர் உசேன் மீது மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் நடந்த திருட்டு வழக்கு கூட இருக்கிறது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்த இரண்டு பேரிடம் இருந்து ரூ.1,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தலைவர்: அப்பகுதியின் உள்ளூர் பாஜக தலைவரான சுரேஷ் குப்தா வளர்த்து வந்த ஆட்டை தான் அவர்கள் இருவரும் சேர்ந்து திருடி உள்ளனர். இந்த ஆடு திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் சென்ற அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாகவே குற்றவாளிகளை போலீசார் விரைவாகக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த பாஜக தலைவரான சுரேஷ் குப்தா கூறுகையில், "ஷேருவை குடும்பத்தினர் ஒருவராகவே பார்த்து வளர்த்தேன். எனது ஆட்டின் பழக்க வழக்கங்கள் அப்படி மனிதர்களைப் போலவே இருந்தது. எனது வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் அந்த ஆட்டுடன் தான் கைகுலுக்குவார்கள்.
அந்தளவுக்கு ஆட்டின் மீது அனைவரும் அன்பு செலுத்துவார்கள். எனது ஆட்டிற்கு இப்படி நடந்ததை ஏற்கவே முடியவில்லை. நான் முதலில் புகார் அளித்த போது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.. அப்படி எடுத்திருந்தால் ஷேருவை காப்பாற்றி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications