என்னது டிசம்பரில் லோக்சபா தேர்தல்? மத்திய பாஜக அரசு ரகசிய திட்டம்- மமதா பானர்ஜி வீசும் புதுகுண்டு!
கொல்கத்தா: லோக்சபா தேர்தலை வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த மத்திய அரசு ரகசியம் திட்டம் தீட்டி இருப்பதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறியதாவது: வரும் டிசம்பர் மாதத்தில் லோக்சபா தேர்தலை திடீரென நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன். டிசம்பர் அல்லது ஜனவரியில் லோக்சபா தேர்தலை நடத்தக் கூடும்.

தேர்தல் ஆணையரை நியமிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொல்கிறார். ஆனால் மத்திய அரசோ, அந்த குழுவில் இருந்து தலைமை நீதிபதியையே நீக்குகிறது. தலைமை நீதிபதிக்கு பதில் மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர் அக்குழுவில் இடம்பெறுவாராம். என்ன கொடுமை!
நாட்டின் பெரும்பாலான ஹெலிகாப்டர் சேவைகளை பாஜக இப்போதே முன்பதிவு செய்து தன்வசப்படுத்திவிட்டது. லோக்சபா தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தாத வகையில் மத்திய அரசு இப்படி செய்திருக்கிறது. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம்தான் கொடி கட்டிப் பறக்கும்.
இந்தியாவில் இந்தியர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இந்த நாட்டில் பாஜகவினர் மட்டுமே சுதந்திரமாக செயல்படுகின்றனர். பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அராஜகமும் சர்வாதிகாரமும் தலை தூக்கிவிடும்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அபிஷேக் பானர்ஜி கைது செய்யப்படுவார் என எனக்கு தகவல் அனுப்புகின்றனர். பாஜகவினர் என்ன செய்வார்கள்? என்பதை நாம் அறியாதது அல்ல.. அவர்கள் நினைத்ததை செய்துதான் பார்க்கட்டுமே.. அபிஷேக் பானர்ஜியின் கம்ப்யூட்டரில் இருந்து தரவுகளை எடுத்திருக்கின்றனர். போலியான கோப்புகளை உருவாக்கி அந்த கம்ப்யூட்டரில் பாஜகவினர் இணைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications