பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த கவர்னர்கள் வீடுகளை காலி செய்ய நேரிடும்!
டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சியமைக்க உள்ளதாக கருத்துக் கணிப்புகள் சொல்லிவருவதை பார்த்தால் காங்கிரஸ் ஆளுநர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டுள்ளது உறுதியாகிறது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். சில நேரங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுக்கு தலைவலியை கொடுக்க வேண்டும் என்பதற்காக அப்படிப்பட்ட நபர்களை ஆளுநர்களாக நியமித்ததும் உண்டு.
கர்நாடகாவில் ஆளுநருக்கும் எடியூரப்பா அரசுக்கும் நடுவே நடந்த மோதல்களும், குஜராத்தில் நரேந்திரமோடி அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் ஏற்பட்ட பிரச்னைகளும் பிரசித்தம்.
இதனால் காங்கிரஸ் நியமித்த ஆளுநர்கள் மீது பாஜக ஒரு கண் வைத்துக்கொண்டுதான் உள்ளது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும் என்று கூறிவருவதால் இப்போதே நீக்கப்பட வேண்டிய ஆளுநர்களின் பட்டியலை பாஜக தலைவர்கள் தயாரித்து வருகிறார்கள்.
டெல்லி முதல்வராக இருந்து கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் இதில் முதலிடத்திலுள்ளார். பஞ்சாப், கர்நாடக, குஜராத் ஆளுநர்களும் இப்பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளனர். ஆனால் தமிழக கவர்னர் ரோசய்யா இந்த பட்டியலில் இல்லை என்று கூறப்படுகிறது.