பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நாளை தொடங்குகிறது- லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை தொடங்குகிறது. லோக்சபா தேர்தலுக்கான புதிய வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, ‘சிறந்த நிர்வாகம்' மற்றும் ‘272+ இடங்கள்' என்ற முழக்கங்களின் அடிப்படையில், வருகிற லோக்சபா தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்த தேர்தலுக்காக அனைத்து வகையிலும் தயாராகி வரும் அக்கட்சி, தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய புதிய வியூகங்களையும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது குறித்து விரிவாக ஆலோசிப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லி ராம் லீலா மைதானத்தில் உள்ள கூட்ட அரங்கில், நாளை தொடங்கி 19-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
தேர்தலுக்கு முன்னதாக அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ளும் கடைசி கூட்டம் என கருதப்படும், இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10 ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, நிதின் கத்காரி, மாநில முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, ராமன்சிங், மனோகர் பாரிக்கர் மற்றும் மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து விவாதிப்பதுடன், 2 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. அதன்படி இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் லஞ்ச, ஊழலை அடிப்படையாக கொண்டு ஒரு அரசியல் தீர்மானமும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு பொருளாதார தீர்மானமும் நிறைவேற்றப்படும் என கட்சியின் தேசிய துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications