சட்டசபைக்குள் அமர்ந்து செல்போனில் பிரியங்கா காந்தி போட்டோவை ஆபாச கோணத்தில் பார்த்த பாஜக எம்.எல்.ஏ!
பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியிலுள்ள சட்டசபை கட்டிடத்தில் நடந்து வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் பெங்களூரு தவிர்த்து பெலகாவியில் நடைபெறுவது வழக்கம் என்பதால் அங்கு பேரவை கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று காலை அவைக்கு வந்த பீதர் மாவட்டம், அவுராத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பிரபு சவான், தனது தலைமீது ஒரு கூடையை கொண்டுவந்தார். அதில் ரேசன் கார்டுகளை வைத்து விற்பனை செய்வது போல கூவிக் கூவி நடித்து காண்பித்தார். கர்நாடகாவில் நடைபெற்றுவரும் போலி ரேசன் கார்டு மோசடியை, சபையின் கவனத்திற்கு கொண்டுவர இதுபோல செய்ததாக அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனால் தொகுதி மக்களும் தங்கள் எம்.எல்.ஏவின் 'கிரியேட்டிவிட்டியை' நினைத்து புழகாங்கிதம் அடைந்திருந்தனர். ஆனால் மதியமே நிலைமை தலைகீழானது. ஏனெனில் மாலையில் பேரவை நடந்து கொண்டிருந்தபோது தனது இருக்கையில் இருந்தபடி எதையும் சட்டை செய்யாமல் செல்போனில் எதைஎதையோ நோண்டியபடி இருந்தார் பிரபு. அப்போது கேலரியில் இருந்த படங்களையும் அவர் பார்த்தார்.
அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தியின் படமும் இருந்தது. பிரியங்கா காந்தி, பேண்ட், சட்டை போட்டிருந்த படம் அவரது செல்போனில் இருந்தது. அந்த படத்தை ஜூம் செய்த எம்.எல்.ஏ சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஜூம் செய்தது முகத்தை அல்ல. ஆபாசமான கோணத்தில் கழுத்தின்கீழே அவர் ஜூம் செய்து வைத்திருந்தார்.
சபையின் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்த கன்னட செய்தி சேனல் வீடியோகிராபர்கள் இதை படம் பிடித்து ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பிரபு சவானை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகருக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதனிடையே ஹாவேரி மாவட்டம், ஹிரேகெரூர் தொகுதி எம்.எல்.ஏவான (பாஜக) யூ.பி.பனக்கார் சட்டசபையில் இன்று தனது செல்போனில் 'கேண்டிகிரஸ்' கேம் ஆடிக் கொண்டிருந்ததையும் கன்னட சேனல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
எடியூப்பா தலைமையிலான கடந்த பாஜக ஆட்சி காலத்தில் சட்டசபையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சிலர் ஆபாச வீடியோக்களை செல்போனில் பார்த்த செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.