மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு மேலும் சறுக்கல்.. திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த எம்எல்ஏ!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ டான்மாய் கோஷ் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் பாஜகவில் சேர்ந்தனர். முக்கியமாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்தவரான சுவேண்டு அதிகாரியின் மொத்த குடும்பமும் அப்படியே பாஜகவில் ஐக்கியம் ஆனார்கள்.

இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் இருந்த இடத்தை விட ஒரு இடம் கூடுதலாக பெற்று 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக 77 இடங்களில் மட்டுமே இந்த தேர்தலில் வென்றது.
இதையடுத்து திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜக சென்ற பல நிர்வாகிகள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி மாறிய நிர்வாகிகள் அப்படியே மீண்டும் திரிணாமுல் பக்கம் திரும்பினார்கள்.
சில வருடங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த மூத்த உறுப்பினர் முகுல் ராய் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தேர்தலுக்கு பின் இணைந்தார். மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு இது மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்தில் இன்னொரு பாஜக எம்எல்ஏ டான்மாய் கோஷ் பாஜகவில் இருந்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். இவர் பாஜக சார்பாக பிஷ்னுபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.
இந்த நிலையில் இன்று திரிணாமுல் கட்சியின் ப்ராத்யா பாசு முன்னிலையில் கொல்கத்தாவில் இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜக கட்சிக்கு மேற்கு வங்கத்தில் மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications