நடுத்தர வர்க்கத்தை டீலில் விட்ட மத்திய அரசு.. கிராமப்புற மக்களை கவர தடாலடி பட்ஜெட்.. பின்னணி என்ன?
Recommended Video
டெல்லி: பாஜகவின் வாக்கு வங்கி என கருதப்பட்ட நடுத்தர மக்களையும், மேல் நடுத்தர வர்க்கத்து மக்களையும் 'டீலில்' விட்டுள்ளநிலையில், ஏழைகள் மீதும், விவசாயிகள் மீதும் பாசத்தை பொழிந்துள்ளது, அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்.
8 மாநில தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா, பொதுத் தேர்தலை மையப்படுத்திப் பட்ஜெட் அறிக்கையில், அதிகளவில் விவசாயத் துறையின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2018-19ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை கட்டமைப்புக்கு 2,000 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் விவசாயத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் 1.5 மடங்கு வரை நிச்சயமாக உயரும் என அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் அறிவிப்பு
வீட்டுவசதி திட்டம், ஆரோக்கிய திட்டங்கள் ஆகியவற்றுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனது உரையில் 30 முறை அருண் ஜேட்லி விவசாயி என்ற வார்த்தையை உச்சரித்தார். கிராமப்புற மக்களுக்கு அதுவும் பாஜக வாக்கு வங்கி அதிகமாக உள்ள வட மாநில மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக விவசாய திட்டங்கள் பலவற்றை அருண் ஜேட்லி ஹிந்தியில் அறிவித்தார் என்பதில் இருந்து அரசின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
நடுத்தர மக்கள் தேவை
அதேநேரம், நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் உள்ளிட்ட சலுகைகள் செய்யப்படவில்லை. மாறாக வருமான வரி மீது 1 சதவீத செஸ் கூடுதலாக்கப்பட்டு, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிலையான கழிவு என்ற பெயரில் ரூ.40,000 மட்டுமே மாதச் சம்பளதாரர்களுக்கு சலுகையாகும்.
கிராமப்புறம்
பாஜக தனது வாக்கு வங்கியை பத்திரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் பாணியில், கிராமப்புறம் சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது ஏன் என்பது குறித்து இருவேறு கருத்துக்களை அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஒரு பார்வை என்பது, எப்படியும் மிடில் கிளாஸ் மக்கள் தங்களுக்குதான் வாக்களிப்பார்கள் என்ன மெத்தனம் பாஜகவுக்கு உள்ளது என்பதாகும். எனவேதான் மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய சலுகைகள் அறிவிக்கவில்லை.
காரணம் என்ன
மற்றொரு பார்வை என்பது, மிடில் கிளாஸ் மற்றும் அப்பர்-மிடில் கிளாஸ் மக்கள் பாஜக அரசின் பொய் வாக்குறுதிகளால் கோபத்தில் உள்ளனர், அவர் ஆதரவு இனியும் கிடைக்காது என்பதாகும். எனவே தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களை ஈர்ப்பதைவிட பெருமளவுக்கு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் ஏழை, எளிய, விவசாய மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கலாம் என பாஜக நினைப்பதாகவும் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் இப்படி செய்துதான் பல ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சியில் இருக்க முடிந்தது என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.