கிரேனில் சிக்கிக்கொண்ட பாஜக எம்.பி.. கீழே இறங்கியதும் ஆத்திரத்தில் ஆபரேட்டருக்கு பளாரென அறை!
போபால்: மத்திய பிரதேசத்தில் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்ற பாஜக எம்.பி கணேஷ் சிங், கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் கிரேன் ஆபரேட்டரை கன்னத்தில் அறைந்தார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிரேன் இயந்திரக் கோளாறால் அந்தரத்தில் தொங்கிய ஆத்திரத்தில், 5 முறை பாஜக சார்பில் எம்.பியாக இருக்கும் கணேஷ் சிங், கிரேன் ஓட்டுநரை கோபமாக பொதுவெளியில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா, மத்திய பிரதேசம் மாநிலம், சத்னாவில் உள்ள செமரியா சவுக் பகுதியில் நேற்று நடந்தது. சத்னா தொகுதி பாஜக எம்.பி கணேஷ் சிங் கலந்துகொண்டார். அப்போது, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக, நகராட்சிக்குச் சொந்தமான ஹைட்ராலிக் கிரேன் ஒன்றில் எம்.பி ஏறி மேலே சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் பழுதாகி, பாதியிலேயே அந்தரத்தில் நின்றது. பின்னர், மீண்டும் கிரேன் இயக்கப்பட்டபோது குலுங்கியுள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த எம்.பி. கணேஷ் சிங், கிரேன் மீண்டும் கீழே இறங்கியதும் கோபத்துடன், கிரேனை இயக்கிய கணேஷ் குஷ்வாஹா என்ற நகராட்சி ஊழியரைத் தன் அருகே அழைத்து, அவரது கையைப் பிடித்து இழுத்து, அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் 'பளார்' என அறைந்தார்.
இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் இந்தச் சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பி-யின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, "இது பாஜக தலைவர்களின் அதிகார போதை மற்றும் மன்னராட்சி மனப்பான்மையைக் காட்டுகிறது. இந்தச் செயல் பாஜக இனி மக்களுக்கானது அல்ல என்பதையும் நிரூபிக்கிறது" என்று விமர்சித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கிரேன் ஓட்டுநர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications