பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் 'தலைமறைவு' என கோர்ட் அறிவிப்பு!
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த மசூதி இடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை லக்னோவில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணையில் தொடர்ந்தும் பாஜக எம்.பி.யான சாக்ஷி மகாராஜ் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்பதற்காக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய விசாரணையிலும் சாக்ஷி மகாராஜ் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். ஆனால் சாக்ஷி மகாராஜின் வழக்கறிஞரோ, நாடாளுமன்றத்தில் அவர் இருப்பதாக கூறி சனிக்கிழமை வரை அவகாசம் கோரினார்.
இதை நீதிமன்றம் நிராகரித்து அவர் தலைமறைவானவர் என்று அறிவித்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.