முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்சிபி சிங் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகல் - என்ன நடந்தது?
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்சிபி சிங், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7ஆம் தேதி நிறைவடைந்தது.
மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் மத்திய அமைச்சர்கள் இருவர் எம்.பி பதவிக்காலம் நிறைவடையும்போது மீண்டும் அது தொடர வாய்ப்பளிக்கப்படாமல் பதவி விலகுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்தார் அப்பாஸ் நக்விக்கும் ஆர்சிபி சிங்குக்கும் பிரதமர் மோதி பாராட்டு தெரிவித்தார்.

வழக்கமாக, மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்தால் அவரை பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இருந்தோ வேறு மாநிலத்தில் இருந்தோ உறுப்பினராக தேர்வு செய்ய பாரதிய ஜனதா கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்.
நாடாளுமன்ற விதிகளின்படி, எம்.பி பதவிக்காலம் முடிந்து விட்டாலோ தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக அமைச்சராகவோ ஒருவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டால் அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் மக்களவையில் இருந்தோ மாநிலங்களவையில் இருந்தோ உறுப்பினராக தேர்வாகலாம்.
ஆனால், இம்முறை முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங்கின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதை அறிந்தும் அவர்கள் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு தரப்படுமா என்பதை பாஜக மேலிடம் தெளிவுபடுத்தவில்லை.
முன்னதாக, புதின்கிழமை நண்பகலில் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக நக்வியும் ஆர்சிபி சிங்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












Click it and Unblock the Notifications