அமித்ஷா என்னை கொன்றுவிடுவார்.. குஜராத் பாரதிய பழங்குடியினர் கட்சி தலைவர் சோட்டுபாய் வாசவா திடுக்!
அமித்ஷா தன்னை கொன்றுவிடுவார் என குஜராத் பாரதிய பழங்குடியினர் கட்சி தலைவர் சோட்டுபாய் வாசவா குற்றம்சாட்டியுள்ளார்,
அகமதாபாத்: அமித்ஷா தன்னை கொன்றுவிடுவார் என குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பாரதிய பழங்குடியினர் கட்சி தலைவர் சோட்டுபாய் வாசவா குற்றம்சாட்டியுள்ளார்,
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.
அனல் பறக்கும் தேர்தல் களம்
பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குஜராத் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
சோட்டுபாய் வாசவா போட்டி
குஜராத் சட்டசபைத் தேர்தலில் முன்னாள் ஜனதாதள கட்சியின் எம்எல்ஏவும் நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தவருமான பாரதிய பழங்குடியினர் கட்சியின் தலைவர் சோட்டுபாய் வாசவா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறார்.
அமித்ஷாவால் உயிருக்கு ஆபத்து
இந்நிலையில் வாசவா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பழிவாங்க விரும்புகிறார் அமித்ஷா
மேலும் குஜராத்தின் விஜய் ரூபானி அரசும் அமித்ஷாவும் தன்னை கொல்ல விரும்புவதாக அவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலுக்கு வாக்களித்ததால் அமித்ஷா தன்னை பழிவாங்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
என்கவுன்டரில் போடப்போகிறார்கள்
குஜராத் போலீஸ் அதிகாரிகளை வைத்து தன்னை என்கவுன்டரில் கொல்ல அமித்ஷா திட்டமிட்டிருப்பதாகவும் வாசவா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் வாசவா தனது வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.