அன்புமணிக்கு உடனே 'லட்டு' கிடைக்காது...?
டெல்லி: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு இப்போதைக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி இப்போதைக்குத் தரப்பட மாட்டாது என்றும் தெரிகிறது.
வரலாறு காணாத வெற்றியுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. வாஜ்பாயால் கூட முடியாததை மோடி அலை சாதித்துள்ளது. 282 இடங்களுடன் தனிப் பெரும்பான்மையுடன் மோடி அரசமைக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 335 இடங்கள் கிடைத்துள்ளன.

மே 20ம் தேதி பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார் மோடி. அதன் பின்னர் அவரது தலைமையில் மத்திய அரசு அமைகிறது. புதிய அமைச்சரவையில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவியை பாஜக தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதால் இப்போதைக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஆர்வம் காட்டவில்லையாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் உள்ளதாம்.
எனவே மோடி பிரதமராகப் பதவியேற்கும்போது, கூடவே பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. இவர்களில், தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒருவரான பொன் ராதாகிருஷ்ணனும் இடம் பெறக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தமிழகத்திலிருந்து பாமக சார்பில் தேர்வாகியுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அமைச்சர் பதவிக்கு சற்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications