பாஜக-பிடிபி கூட்டணி முறிவிற்கு பின்னணியில் அஜித் தோவல் அட்வைஸ்? பின்னணி தகவல்கள்
Recommended Video
டெல்லி: பாஜக-பிடிபி கூட்டணி பிளவுக்கு பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறிய சில தகவல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ரம்ஜானையொட்டி தாக்குதல் நிறுத்தத்தை இந்தியா அமல்படுத்தியது. இதன்படி பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கி சண்டையிடுவது மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இந்த காலகட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறலும் மற்ற நேரங்களைவிடவும் இரட்டிப்பாகியது.
பாக். ராணுவம் அத்துமீறல்
பாக்.ராணுவத்தினர் சுட்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து மறுநாளே 2 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
ரம்ஜானுக்கு முந்தைய நாள், காஷ்மீரில் பிரபல பத்திரிகையாளர் சுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், போர் நிறுத்தத்தை தொடராமல் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு பிடிபி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பாஜக-பிடிபி நடுவேயான கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
அஜித் தோவல்-அமித்ஷா சந்திப்பு
இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்தார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம், பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளின் திட்டங்கள் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதே சிறந்தது என்று அஜித் தோவல் அப்போது அமித்ஷாவிடம் கூறியதாக தெரிகிறது.
அமைச்சர்களுடன் ஆலோசனை
இதையடுத்து, காஷ்மீர் அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த அமைச்சர்களை டெல்லிக்கு அழைத்து இந்த முடிவு குறித்து அமித்ஷா விளக்கியுள்ளார். இதையடுத்து மெஹபூபா முப்தி அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற பாஜக முடிவு செய்து அறிவித்துள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல்
இதனிடையே மெஹபூபா முப்தி அரசு கவிழ்ந்ததும், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலுக்கு காஷ்மீரில் பாஜகவை தயார் படுத்த இந்த காலகட்டம் உதவும் என பாஜக தலைமை நினைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.