மோடி சர்க்காரின் முதல் 30 நாள் சாதனைகள்- வீடியோ வெளியிட்டது பாஜக
டெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற 30 நாட்களில் செய்துள்ள பணிகளை சாதனை விளம்பர வீடியோவாக வெளியிட்டுள்ளது பாஜக. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று நரேந்திரமோடி தலைமையில் கடந்த மாதம் 26ம்தேதி அரசு அமைந்தது. முதல் 30 நாட்களில் அரசு செய்துள்ள பணிகள் குறித்து, மக்களின் பார்வைக்கு வீடியோ காட்சியாக வைத்துள்ளது பாஜக. இதை விளம்பரமாக யூடூப்பிலும் வெளியிட்டுள்ளது. மொத்தம் 5.27 நிமிடங்கள் இந்த விளம்பர படம் ஒடுகிறது.
மோடி சர்க்காரின் 30 நாட்கள்
மோடி சர்க்காரின் 30 நாட்கள்

சார்க் நாட்டு தலைவர்கள்
முப்பது நாளில் எதுதான் முடியாது..? என்ற கேள்வியுடன் விளம்பரம் ஆரம்பிக்கிறது. வருங்கால திட்டங்களுக்காக புளூபிரிண்ட் தயாரிக்கப்பட்டது, சார்க் நாடுகள் மற்றும் மொரீசியஸ் நாட்டு தலைவர்களை மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வரவழைத்தது ஆகியவையும் சாதனை பட்டியலில் முதல் இடங்களை பிடித்துள்ளன.

மோடி, ஜெயலலிதா சந்திப்பு
ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே பாகிஸ்தான், இலங்கை சிறைகளில் இருந்து இந்திய கைதிகள் விடுதலை செய்யப்பட்டது காட்சியாக ஓடுகிறது. 'சிறிய அரசு பெரிய நிர்வாகம்' என்ற கோஷத்தின்படி அரசு செயல்படுவதாக கூறும் அந்த விளம்பரம், மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காண்பிக்கிறது. மோடியுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசிய காட்சி தவறாமல் இடம் பெற்றுள்ளது.

பூடான் சுற்றுப்பயணம்
ராணுவ தளவாட உற்பத்தில் தன்னிறைவை அடையும் நோக்கில் எடுக்கப்பட்ட முயற்சியாக, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்ததையும் விளம்பரம் குறிப்பிடுகிறது. அண்டை நாடுகளுடனான நல்லுறவை மோடி மேம்படுத்தியுள்ளார் என்பதற்கு ஆதாரமாக, அவரது பூடான் நாட்டு சுற்றுப்பயண காட்சிகளும் திரையில் ஓடுகிறது.

ஆறு பெண் அமைச்சர்கள்
கட்சியினர் எனது காலை தொடாதீர்கள், என மோடி கூறியது, கங்கை நதியை சுத்தீகரிப்பு செய்ய நடவடிக்கை துவங்கியது, சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணை குழு அமைத்தது, அமைச்சரவை குழுக்கள், அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் போன்றவற்றை கலைத்தது, முதன்முறையாக ஆறு பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது உள்ளிட்டவையும் சாதனைகளாக திரையில் விரிகின்றன.

புல்லட் பாயிண்டுகள்
நாடாளுமன்ற செயலகத்தில் அதிகாரிகள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்பதை கண்டறிய மோடி திடீர் விசிட் அடித்தது, காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகாரிகளை பணிக்கு வரவழைத்தது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மோடி உரையாற்றியது, அரசு பணியாளர்களிடம் கோப்புகளை நீட்டாதீர்கள்.. புல்லட் பாயிண்டுகளை மட்டும் காண்பியுங்கள் என உத்தரவிட்டுள்ளது, காஷ்மீர் பண்டிட்டுகளை திரும்பவும் அழைத்துவர நடவடிக்கை எடுத்திருப்பது உள்ளிட்டவை 30 நாள் சாதனைகளாக விளம்பரத்தில் காண்பிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications