சூத்திரர்கள், தலித்துகள், பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதி ஆட்சியை நோக்கி பாஜக..சித்தராமையா எச்சரிக்கை
மைசூர்: நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கக் கூடிய சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதியின் அடிப்படையிலான ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்த பாஜக துடிக்கிறது என கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
மைசூரில் காங்கிரஸ் வேட்பாளர் லக்ஷமணனுக்கு ஆதரவாக தலித் செயற்பாட்டாளர்கள், தலைவர்களின் கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதாவது: மோடி நாட்டின் பிரதமராகிவிட்டால் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என பேசியவர்தான் முன்னாள் பிரதமர் தேவ கவுடா. இப்போது அதே மோடியுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளுக்கு தெளிவான சித்தாந்த புரிதல் அவசியமானது.

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சமூக நீதிக்கு எதிரானது. அதனால்தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. இடஒதுக்கீடு என்பது பிச்சை கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைதான் இடஒதுக்கீடு. இந்திய சமூகத்தில் ஜாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு என்பதும் இருந்தே தீரும்.
இந்தியாவின் விடுதலைக்கு முன்னர் சூத்திரர்களாகிய நாம் கல்வி உரிமையை பெற்றிருந்தோமா? பெண்களுக்கான உரிமைகள் கிடைத்தனவா? கணவர் இறந்த உடனே பெண்ணும் தீக்குளித்து உடன்கட்டை ஏறுகிற கொடுமைதானே நடந்து கொண்டிருந்தது? மனுஸ்மிருதி என்ற பெயரால் மனிதகுல விரோத பழக்க வழக்கங்கள்தானே பின்பற்றப்பட்டன. இவற்றை எல்லாம் நமது அரசியல் சாசனம் தடை செய்திருக்கிறது.
ஆனால் தற்போது அத்தகைய மனிதகுல விரோதமான மனுஸ்மிருதியின் சரத்துகளை அரசியல் சாசனத்தில் இணைக்க பாஜக முயற்சிக்கிறது. அந்த மனுஸ்மிருதியின் ஆட்சியை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. இந்த சதியை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
கோவில் கருவறைக்குள் சூத்திரர்களும் பெண்களும் தலித்துகளும் இன்றும் அனுமதிக்கப்படுவதில்லையே. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர் பொறுப்புகளில் சூத்திரர்கள், தலித்துகள், பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நஞ்சே கவுடா உள்ளிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்படுவதில்லை. சூத்திரர்களை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே செய்கின்றனர். ஆகையால்தான் சூத்திரர்களும் தலித்துகளும் பெண்களும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேரவே கூடாது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கை கோர்த்துவிட்டது. அதனால் அந்த கட்சியை விமர்சிக்காமலா இருக்க முடியும்? தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப மேம்பாட்டு நிதியை ஒதுக்கியது காங்கிரஸ் அரசுதான். இத்தகைய முற்போக்கான சட்டத்தை நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலாவது பாஜக அரசு அமல்படுத்தி இருக்கிறதா? ஒப்பந்தங்களில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததும் காங்கிரஸ்தான். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்ததும் பாஜகதானே? இவ்வாறு சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications