“மோடியின் நிழல்” அமீத் ஷாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: பாஜக பொதுச் செயலாளரும், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய உதவியாளருமான அமீத் ஷாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
போலி என்கவுண்டர் வழக்குகளில் முக்கியக் குற்றவாளியாக இருந்து வருபவர் அமீத் ஷா. இந்த நிலையில் அவருக்கு உயரிய பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பியில் பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்க அமீத் ஷா செய்த பணிகள்தான் காரணம் என்பதால் அதற்குப் பரிசாக இந்த பாதுகாப்பு அளித்துள்ளனர் என்று தரிகிறது.
அமீத் ஷாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று செய்திகள் வந்ததால், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
தற்போது நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோர் இசட் பிளஸ் பாதுகாப்பை அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர மேலும் 13 விஐபிக்களின் பாதுகாப்பும் நேற்று மேம்படுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது.
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் வரும் நபருக்கு 25 கமாண்டோக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பயணம் மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நபரின் காருக்கு முன்னால் ஒரு காரும், பின்னால் ஒரு காரும் வரும். அதில் கருப்புப் பூணைப் படையினர் பாதுகாப்பாக வருவார்கள்.
இதுபோக சம்பந்தப்பட்ட நபரின் வீடு, அலுவலகம் ஆகியவற்றிலும் கூடுதலாக பாதுகாப்பு தரப்படும்.
அமீத் ஷா விரைவில் பாஜக தலைவராகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அவருக்கு இப்போதே பாதுகாப்பை அதிகரித்துள்ளனர் என்று தெரிகிறது.
அமீத் ஷா மீது தற்போது சோராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு, பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.