ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ பற்றி அசிங்கப் பேச்சு.. டெல்லி பாஜக எம்.எல்.ஏ பதவி பறிபோகிறது
டெல்லி: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏவை பற்றி தரக்குறைவான வார்த்தையால் திட்டிய டெல்லி சட்டசபை பாஜக எம்.எல்.ஏ பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
டெல்லி, விஸ்வாஸ்நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாஜகவை சேர்ந்த ஓ.பி.ஷர்மா. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது இவரது வாடிக்கை.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், டெல்லி சட்டசபையில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் நடுவே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பாவை பார்த்து, 'இரவில் ரோட்டில் திரியும் பெண்' என்ற வார்த்தையை (விபச்சாரி என்று பொருள்படும் வகையில்) ஷர்மா பேசியதாக கூறப்படுகிறது.
இந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். தற்போது ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார் ஷர்மா.
இதனிடையே, ஷர்மா மீதான குற்றச்சாட்டை விசாரித்த டெல்லி சட்டசபை நன்னெறி கமிட்டி, அவரை பதவி நீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு சிபாரிசு செய்துள்ளது.
இதுபற்றி, கருத்து தெரிவித்துள்ள ஷர்மா, ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ, அல்கா தன்னை அடிக்க பாய்ந்ததாகவும், நான் எதையும் கூறவில்லை எனவும், சிசிடிவி காட்சிகளை பரிசீலித்தால் உண்மை தெரியும் எனவும் கூறியுள்ளார்.
ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் கன்யாகுமார், பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டபோது, ஷர்மாவும் கோர்ட்டுக்கு வந்திருந்ததும், அங்கு, இடதுசாரி நிர்வாகி ஒருவரோடு கைகலப்பில் ஈடுபட்டதும் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications