தனி தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம்.. பா.ஜ.க. திட்டவட்டம்: வைகோ பதில் என்ன?
பெங்களூர்: தனி தமிழ் ஈழத்தை பா.ஜ.க. ஒருபோதும் ஆதரிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, அவர், ''பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மக்களின் அன்புக்கு பாத்திரராக விளங்குகிறார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏராளமானோர் சேர்ந்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர உள்ளன என்றார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில், வரலாற்றில் முன்பு இல்லாத அளவுக்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி வரலாற்று சாதனை படைக்க உள்ளது.

அதேபோல இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்க எண்களில் வெற்றி பெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, இமாம் புகாரியை சந்தித்து பேசி இருக்கிறார். இது எந்த வகையான மதசார்பற்ற தன்மை என்பதை காங்கிரஸ் கட்சி விளக்க வேண்டும்.
மேலும், முஸ்லிம் லீக், சிமி உள்ளிட்டவற்றை காங்கிரஸ் ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம் காங்கிரஸ் மதவாத கட்சி என்று தெளிவாகிறது.
தென் இந்தியாவில் குறைந்தபட்சம் 50 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் தனி தமிழ் ஈழத்தை பா.ஜ.க. ஆதரிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், இலங்கையை பிரிப்பதில் பாஜகவிற்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை. இலங்கை தமிழர் பிரச்னைக்கு எந்த வகையான தீர்வு என்றாலும் அது அந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications