டெல்லி மட்டுமல்ல.. உ.பி இடைத்தேர்தலிலும் கோலோச்சும் பாஜக! சமாஜ்வாதி கோட்டை காலி!
லக்னோ: அயோத்தி அமைந்திருக்கும் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சியிடமிருந்து பாஜக, இந்த தொகுதியை கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம் பாஜகவின் கோட்டையாக மில்கிபூர் உருவாகி இருக்கிறது. பாஜக தொண்டர்கள், இந்த வெற்றியை பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அயோத்தி மாவட்டத்தில் இந்த சட்டமன்ற தொகுதி அமைந்திருக்கிறது. 1967 முதல் இந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த கட்சிகளை விடவும் இந்த தொகுதியில் சமாஜ்வாதிதான் அதிகம் முறை ஜெயித்திருக்கிறது. சமாஜ்வாதியின் கோட்டை என்று கூட இதை சொல்ல முடியும். ஆனால் தொடர் வெற்றிக்கு 2017ல் பாஜக முடிவுரை எழுதியது. அந்த தேர்தலில் பாஜக சார்பில் நின்ற வேட்பாளர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வாகியிருந்தார்.
ஆனால், அடுத்த தேர்தலிலேயே அதாவது, 2022 தேர்தலில் பாஜகவை சமாஜ்வாதி பழிதீர்த்துக்கொண்டது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவதேஷ் பிரசாத், 103,905 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அத்துடன் நிற்காமல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பைசாபாத் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். எனவே மில்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இந்த முறை அஜீத் பிரசாத் சமாஜ்வாதி தரப்பிலும், சந்திரபானு பஸ்வான் பாஜக தரப்பிலும் களமிறக்கப்பட்டனர். இருவருக்கும் இந்த தொகுதியில் நிறைய செல்வாக்கு இருக்கிறது.
பாஜகவை பொறுத்தவரை, இது அயோத்தி கோயில் அமைந்திருக்கும் தொகுதி. எனவே கைப்பற்ற வேண்டும், இல்லையெனில் கௌரவ பிரச்சனை ஏற்பட்டுவிடும். இதை மனதில் கொண்டு தீவிரமாக கள வேலைகளை செய்தது.
மறுபுறம் சமாஜ்வாதி கட்சியை பொறுத்தவரை, சிட்டிங் எம்எல்ஏ உள்ள தொகுதி இது. கையை விட்டு போய்விட்டால், தொண்டர்களுக்கு கட்சி மேல் இருக்கும் நம்பிக்கை உடைந்துவிடும். எனவே விட்டு கொடுக்க கூடாது. அதேபோல, அயோத்தியை காரணம் காட்டி மட்டுமே மக்கள் வாக்கை பாஜகவால் பெற முடியாது என்பதை நரூபிப்பதற்கும் இந்த தேர்தலில் கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். எனவே இதற்காக கட்சி கடுமையாக உழைத்தது.
பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 24 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன. சந்திரபானு பஸ்வான் 55,798 வாக்குகள் முன்னிலையிலும், இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அஜித் பிரசாத்தும் இருந்தனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாஜகவின் சந்திரபானு 1,46,397 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் இவரை விட 61,710 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications