காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு பற்றி விவாதிக்க தயார்: மோடி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு பற்றி விவாதிக்க தயார் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்முவில் நேற்ரு நடைபெற்ற பாஜகவின் லால்கர் பேரணியில் நரேந்திர மோடி பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு பலனளிக்கிறதா, இல்லையா என்பது குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அதில் சிறப்பு அந்தஸ்தினால் நன்மை என்று தெரிய வந்தால் அதனை ஏற்கத் தயாராக இருக்கிறோம்.

மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா வேறு மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டதால் அவரது உரிமைகள் பறிபோயின. ஆனால், வெளிமாநிலத்துப் பெண்ணை ஒமர் அப்துல்லா திருமணம் செய்துகொண்டாலும் அவரது உரிமைகள் பறிபோகவில்லை. இது பெண்களுக்கு எதிரான அநீதியாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 73-ஆவது திருத்தத்தில் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருளாதார அதிகாரம் ஜம்மு காஷ்மீரில் மறுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சுய நிர்ணய உரிமை குறித்து பேசுபவர்களுக்கு உள்ளாட்சிகளுக்கு உரிமை அளிக்க மனம் வரவில்லை.
60 ஆண்டுகளாக சுய நிர்ணய உரிமை குறித்து பேசிப் பேசி, பிரிவினைவாதத்தைதான் அவர்கள் வளர்த்து வருகின்றனர். மாநில சுய நிர்ணய உரிமைக்கு பதிலாக, மாநில வளர்ச்சிக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது எவ்வளவோ நன்மை அளித்திருக்கும் என்றார்.
சீன ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு
இக்கூட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங் சீனாவுடன் செய்துகொண்டுள்ள எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இரு தரப்புப் படையினரும் எல்லைதாண்டி உள்ளே வந்தால் அவர்கள் மீது எதிர் தரப்புப் படை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற பிரதமர் தவறிவிட்டார். டிசம்பர் 5-ந் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எழுப்புவோம் என்றார்.












Click it and Unblock the Notifications