இலக்கு 250 இடங்கள்.... இழுத்து போடு திரிணாமுல் பிரமுகர்களை.. மே.வங்கத்தில் பாஜக தடாலடி வியூகம்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 250 இடங்களில் வெல்வதற்கான வியூகம் வகுத்து உற்சாகமாக களமிறங்கி விளையாடி வருகிறது பாஜக. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்களை ஒட்டுமொத்தமாக வளைத்துப் போட்டு வருகிறது பாஜக.
இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வசம் சென்றது. மமதா பானர்ஜிக்கு சிறுபான்மை சமூகத்தினர் முழு அளவில் ஆதரவு தருகின்றனர்.
இதனால் இந்துக்களின் வாக்குகளை அப்படியே வளைத்துப் போட வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். ஆனால் இதற்கு பதிலடியாக வங்காளிகள் எனும் மாநில அடையாளத்தை மமதா பானர்ஜி முன்வைத்து வருகிறார். இருப்பினும் பாஜகவினருடன் இடதுசாரிகள் கை கோர்த்துள்ளதால் மமதாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் அமோகம்
லோக்சபா தேர்தலில் பாஜகவே எதிர்பார்க்காத வகையில் 18 இடங்களை அள்ளியது. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இது பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இலக்கு 250 தொகுதிகள்
2021-ல் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என பேசிவருகின்றனர் பாஜகவினர். மொத்தம் உள்ள 294 இடங்களில் 250 ஐ பாஜக கைப்பற்ற வேண்டும் என்கிற வியூகத்துடன் களமிறங்கியுள்ளது பாஜக.

திரிணாமுல் தலைகளுக்கு குறி
இதன் முதல் கட்டமாக திரிணாமுல் காங்கிரஸில் செல்வாக்கு மிக்க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கவுன்சிலர்களை இழுத்து வருகிறது பாஜக. இது திரிணாமுல் காங்கிரஸுக்கு நிச்சயம் பின்னடைவைத்தரும்.

அணிசேரும் சிறுபான்மை வாக்குகள்
அதே நேரத்தில் பாஜகவின் விஸ்வரூபமானது ஒட்டுமொத்த சிறுபான்மையினர் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் சேர்த்துவிடும். பாஜகவை பொறுத்தவரையில் சட்டசபை தொகுதிகளை ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

தொகுதிகளும் வியூகங்களும்
நிச்சயம் வெல்ல முடியும் என்கிற அடிப்படையிலான 130 தொகுதிகள், 2-வது இடத்தை கைப்பற்ற முடியும் என கருதக் கூடிய 65 தொகுதிகள், வெல்வது கடினம் மற்றும் 3-வது இடம் கிடைக்கும் என்கிற களசூழலைக் கொண்ட எஞ்சிய தொகுதிகள்.. இப்படித்தான் பிரித்து களப்பணிகளை செய்து கொண்டிருக்கிறது பாஜக. மேலும் சிங்கூர் போன்ற பகுதிகளில் தொழில்வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவோம் என வாக்குறுதி அளிப்பது; எல்லையோரங்களில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவோம் என வாக்குறுதி தருவது என ஒவ்வொரு மாவட்டத்துக்குமான பிரச்சனைகளை அலசி அதனடிப்படையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக. பாஜகவின் இந்த அதிரடி வியூகத்துக்கு பதில் தந்து ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications