லோக்சபா தேர்தலில் போட்டியிடாதீர்கள்: ராஜ் தாக்கரேவிடம் பாஜக கெஞ்சல்
மும்பை: லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று மதியம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் ராஜிடம் கூறுகையில், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் பாஜக-சிவசேனாவுக்கு உதவுங்கள். இல்லை என்றால் சில தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் நடக்கும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு வருமாறு ராஜ் தாக்கரேவுக்கு பாஜக அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கட்காரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராஜ் தாக்கரேவிடம் கூறினேன் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்துவிடும் என்று. மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவால் காங்கிரஸ் நன்மை பெறுவதை விரும்பவில்லை. அதனால் தேர்தல் போட்டியிடாதீர்கள் இல்லை என்றால் எங்கள் வேட்பாளர்களுக்கு உதவுங்கள். அப்படி போட்டியிட்டால் முடிந்த அளவுக்கு குறைவான தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று ராஜிடம் தெரிவித்தேன்.
பாஜக தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்து பேசியது பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்துள்ள சிவசேனாவுக்கு பிடிக்கவில்லை.
ராஜ் தாக்கரே கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிவ சேனாவில் இருந்து வெளியேறி மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவை நிறுவினார். 2009ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 சீட்களில் 13-ஐ ராஜ் தாக்கரே கட்சி வென்றது. அவரால் தான் பாஜக-சிவசேனா கூட்டணி 55 சீட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மேலும் கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலிலும் ராஜ் தாக்கரே கட்சிக்கு கணிசமான வாக்குகள் சென்றதால் தான் பாஜக தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications