மணிப்பூரில் தொங்கு சட்டசபைக்கு நோ சான்ஸ்.. பாஜக 40 இடங்களில் ஜெயிக்கும்.. முதல்வர் பைரேன்சிங் ஆரூடம்
இம்பால்: மணிப்பூரில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பே இல்லை; பாரதிய ஜனதா கட்சியே 40 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று முதல்வர் பைரேன்சிங் கூறியுள்ளார்.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் முதல் கட்டமாக 38 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
மணிப்பூரில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரிகள் கை கோர்த்துள்ளன. இதுவரை கூட்டணி கட்சிகளாக இருந்த மாநில கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. மணிப்பூர் சட்டசபை தேர்தலில் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் ஒருவர் தந்தை பாஜகவினரால் சுடப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும் சனிக்கிழமையன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
உ.பி. சட்டசபை தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு Live: 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
போராளி குழுக்கள்
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்களும் இயங்கி வருகின்றன. இடதுசாரி போராளி குழுக்கள் பாஜகவுக்கு எதிராக இருக்கின்றன. அதேநேரத்தில் 17 இயக்கங்களின் கூட்டமைப்பான குக்கி தேசிய கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆயுத படை சட்டம் நீக்கமா?
இந்நிலையில் மணிப்பூர் தேர்தல் களம் குறித்து முதல்வர் பைரேன்சிங் கூறியதாவது: மணிப்பூர் மாநிலமானது மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இம்மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி இதற்கான அடிப்படை பணிகளை செய்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை
கடந்த 5 ஆண்டுகளில் போராளி குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம் நீக்கப்படும். மணிப்பூரில் 40 இடங்களில் பாஜக வென்று ஆட்சியைத் தக்க வைக்கும். சிலர் கூறுவது போல மணிப்பூரில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பே கிடையாது. அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அதிகபட்சம் 20 இடங்களைக் கைப்பற்றக் கூடும்.
பாஜகவே ஆட்சி அமைக்கும்
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஒரு சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தோல்வி பயத்தால் விரக்தியால் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சி ஒன்றுதான் பாஜகவின் இலக்கு. ஆகையால் மணிப்பூரில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு பைரேன்சிங் கூறினார்.