பெண்களுக்கு மாதம் ₹3000.. வேலையில்லாத ஆண்களுக்கும் உதவி தொகை.. மம்தாவை வீழ்த்த அமித் ஷா மெகா பிளான்
கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் இப்போது பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கே ஒரு பெரிய சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை, பொது சிவில் சட்டம் எனப் பல முக்கியமான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் இந்த முறை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு இந்த முறை திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நடத்துகிறது. ஒரு பக்கம் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் திரிணாமுல் இருக்கிறது. இதற்காக அக்கட்சியினர் இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.

மேற்கு வங்கம்
மற்றொரு புறம் படிப்படியாக வளர்ந்து வரும் பாஜக, இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கடந்த 2016ல் வெறும் 3 இடங்களில் வென்றிருந்த பாஜக, 2021ல் 77 இடங்களில் வென்றது. இதை அப்படியே இரண்டு மடங்கு அதிகரித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அவர்கள் முயற்சியாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அங்குள்ள வாக்காளர்களைக் கவர பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்
இதில் பல முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் மிக முக்கியமான விஷயம் அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு. இதைத் தான் இந்த முறை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த 45 நாட்களுக்குள் மாநில அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பலன்கள் வழங்கப்படும் என அமித் ஷா உறுதி அளித்துள்ளார். இது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவரும் ஒரு 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'.
பெண்களுக்கு ரூ.3000
மம்தாவின் 'லட்சுமி பண்டார்' திட்டத்திற்குப் போட்டியாக, பாஜக தனது திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ₹3000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கும் மாதம் ரூ.3000 உதவி தொகை வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஊடுருவலை வைத்தே பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த தேர்தல் அறிக்கையில், "பாஜக ஆட்சிக்கு வந்தால், எல்லைகள் முழுமையாகச் சீல் வைக்கப்படும். மனிதர்கள் மட்டுமல்ல, ஒரு பறவை கூட எல்லையைத் தாண்ட முடியாத அளவுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" என அமித் ஷா கூறியிருக்கிறார்..
15 முக்கிய வாக்குறுதிகள்
- பெண்களுக்கு மாதம்தோறும் ₹3,000 நிதியுதவி வழங்கப்படும்.
- வேலையில்லாத ஒவ்வொரு இளைஞருக்கும் ₹3,000 நிதியுதவி வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப்படும்..
- பொது சிவில் சட்டத்தை 6 மாதங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை கடத்தலைத் தடுக்கவும் கடுமையான சட்டம் உருவாக்கப்படும்!
- தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஊடுருவல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை.
- திரிணாமுல் காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
- சிண்டிகேட் நடவடிக்கைகள் மற்றும் ஊழல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
- அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உறுதி மற்றும் 7-வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும்.
- பெண்கள் மட்டுமே கொண்ட காவலர் பட்டாலியன்கள், துர்கா சுரேக்ஷா படைகள் உருவாக்கப்படும். மாநில அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குர்மாலி மற்றும் ராஜ்போங்ஷி மொழிகள் சேர்க்கப்படும்.
- நெல், உருளைக்கிழங்கு மற்றும் மாம்பழ சாகுபடிக்கு ஆதரவு வழங்கப்படும்.
- பிரதமரின் மத்சய சம்பதா யோஜனாவின் கீழ் அனைத்து மீனவர்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.. மேற்கு வங்கத்தை மீன் ஏற்றுமதி மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
- பழைய மற்றும் டார்ஜிலிங் தேயிலைத் தோட்டங்களைப் புதுப்பித்தல் மற்றும் சணல் தொழிலை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- அனைத்து மத்திய அரசுத் திட்டங்களுடனும் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவை அமல்படுத்தப்படும். இலவச HPV தடுப்பூசி, மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும். மாநிலத்தின் வடக்கு பகுதியில் எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம் அமைக்கப்படும்.
- வந்தே மாதரம் அருங்காட்சியகம் நிறுவப்படும்
- மத வழிபாட்டுச் சுதந்திரத்தை உறுதி செய்யும் சட்டத்தை இயற்றப்படும்.












Click it and Unblock the Notifications