உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? காங்கிரசுக்கு பொன் ராதாகிருஷ்ணன் சவால் !
டெல்லி: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி தன்னுடைய பலத்தை காட்ட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தது நம்பிக்கையூட்டுகிறது. இந்த சந்திப்பு தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறிய அவர், கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற ஜெயலலிதாவிடம் தாம் எடுத்துரைத்தாகவும், குளச்சல் துறைமுகம் அமைப்பது குறித்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவது குறித்தும் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளது. அதேசமயம் குதிரை சவாரி செய்து கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டட்டும் என்றார்.