காங்கிரஸ், பாஜகவை கைவிடுகிறது தென்னிந்தியா: ஏபிபி-ஏசி நீல்சன் கருத்துக் கணிப்பு
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 210 சீட்கள் வரை கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 81 இடங்கள்தான் கிடைக்கும் என்று ஏபிபி- ஏசி நீல்சன் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
சமீப காலமாக புற்றீசல் போல கிளம்பி வரும் கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில் ஏசி நீல்சன் கருத்துக் கணிப்பும் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளைப் போலவே இதிலும் பாஜகவுக்கு சாதகமாகவே செய்திகள் உள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு சீட்
பாஜகவுக்கு இதுவரை பெற்றிராத அளவுக்கு அதிக அளவிலான சீட்கள் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 226
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரும் லோக்சபா தேர்தலில் 226 சீட்கள் வரை கிடைக்கும் என்று இது கணித்துள்ளது.
பாஜகவுக்கு மட்டும் 210
அதில் பாஜகவுக்கு மட்டும் 210 சீட் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 101
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தமா 101 இடங்களே கிடைக்குமாம்.
காங்கிரஸுக்கு 81
இதில் காங்கிரஸ் கட்சிக்கு 81 இடங்களே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இடதுசாரிகளுக்கு 30
இடதுசாரி கட்சிகளுக்கு மொத்தமாக 30 கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கணித்துள்ளது.
முக்கியமான 186
அதேசமயம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றில் சாராத கட்சிகளுக்கு மொத்தமாக 186 இடங்கள் கிடைக்குமாம்.
இதுதான் முக்கியமானது.
யார் யார்னு.. சொல்லலையே
ஆனால் இந்த 186 இடங்களைப் பெறப் போகிற கட்சிகள் எது என்பதை அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்க மறந்து விட்டது.
ஆம் ஆத்மிக்கு 11 சீட்
இருப்பினும் ஆத் ஆத்மிக்கு 11 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
பாஜகவுக்கு வடக்கு - மேற்கில் நல்ல ஆதரவு
பாஜக கூட்டணிக்கு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில்தான் ஆதரவு அதிகமாக இருக்கிறதாம். குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் போன்ற மேற்கு மாநிலங்களிலிருந்து மட்டும் 82 இடங்களை வெல்கிறதாம். இந்த மாநிலங்களில் மொத்தம் 116 சீட்கள் உள்ளன.
வடக்கிலிருந்து 82
வட மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 82 சீட்கள் கிடைக்குமாம். இங்கு மொத்தம் 151 தொகுதிகள் உள்ளன.
கிழக்கில் 43 கிடைக்கலாம்
மொத்தம் 142 தொகுதிளை வைத்துள்ள கிழக்கு மாநிலங்களிலிருந்து 43 சீட்களை பாஜக கூட்டணி பெறுமாம்.
கைவிடுகிறது தென்னிந்தியா
அதேசமயம், பாஜக கூட்டணியை தென்னிந்தியா கைவிடுகிறது. இங்கு மொத்தம் உள்ள 134 தொகுதிகளில் அக்கூட்டணிக்கு வெறும் 19 இடங்களே கிடைக்குமாம். இது நிச்சயம் பாஜகவுக்கு அதிர்ச்சிச் செய்தியாகும்.
நான்கு மண்டலங்களிலும் நார்மலாக இருக்கும் காங்.
ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்ணிக்கு இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பரவலாக தொகுதிகள் கிடைக்கும் என்பது ஆச்சரியமானது.
தென்னகத்தின் மற்றவர்களுக்கு 76 சீட்கள்
தென் இந்தியாவில் காங்கிரஸ், பாஜக தவிர்த்து, பிற கட்சிகளுக்கு 76 சீட்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிற கட்சிகளில் அதிமுகவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியப் பங்கு வகிக்கப் போகும் தமிழகம், ஆந்திரா
தென்னிந்தியாவில் தமிழகமும், ஆந்திராவும்தான் முக்கியப் பங்கு வகிக்குமாம். இந்த இரண்டு மாநிலங்களிலுமே காங்கிரஸுக்கும் சரி, பாஜகவுக்கும் சரி அதிக அளவிலான சீட்கள் கிடைக்காதாம்.
மோடிக்கு நல்ல ஆதரவு
மோடி பிரதமராக இந்தியா முழுவதிலுமே நல்ல ஆதரவு இருக்கிறதாம். 53 சதவீதம் பேர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 15 சதவீதம் பேரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. இவர்கள் யாருமே வேண்டாம் என்று சொன்னவர்கள் 27 சதவீதம் பேர்.