13வது அரசியல் சாசன திருத்தம் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு: ராஜ்நாத்சிங்
சிவகங்கை: இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தம் மூலம் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
சிவகங்கை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து காரைக்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரு கட்சிகள் தான் ஆட்சி அமைக்க முடியும். மூன்றாவது கட்சி பற்றியோ, இது குறித்த அரசியல் சிந்தனையோ இது வரை இருந்தது இல்லை. தற்போது பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ள கூட்டணி அலை மூலம் மத்தியில் ஆட்சியை பிடிப்பதோடு, 2016-ல் தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்துள்ளன. ஆனால் தமிழ்நாடு எந்தளவுக்கு முன்னேற்றமடைந்திருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு முன்னேற்றமடையவில்லை.
ப.சிதம்பரம் நீண்ட நாட்களாக சிவகங்கை தொகுதியின் எம்.பியாக இருந்தும், மத்திய நிதி அமைச்சராக பதவி வகிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இங்கு ஏதேனும் தொழிற்சாலைகள் வந்திருக்கிறதா என்றால் இல்லை. இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு காங்கிரசோ, அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ தீர்வு தரவில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மீனவர் மேம்பாட்டிற்கு ஆணையம் அமைக்கப்படும்.
இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காரணம் நமது ராஜ்ய உறவுகள் அங்கே திறமையாக பயன்படுத்தப்படவில்லை. இலங்கையில் 13-வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசு அதை செய்ய வில்லை. இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுத் தந்திருக்க வேண்டும். முடியுமா? முடியாதா!
மோடி பிரதமரானவுடன் இலங்கையில் 13-வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தருவார்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications