கன்யா குமாருக்கு எதிரான சர்ச்சை பேச்சு: பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்!
டெல்லி: ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமாரின் நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம்; அவரை சுட்டுக் கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி குல்தீப் வார்ஷினி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.
டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த மாதம் 9-ந்தேதி இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் சிலர் கோஷம் எழுப்பியதாகவும், இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் 12-ந்தேதி தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் கன்னையா குமார் 6 மாத இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், படாவன் மாவட்டத்தின் பாஜக யுவ மோர்ச்சா தலைவரான குல்தீப் வார்ஷினி,கன்னையாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவரது நாக்கை வெட்டுபவர்களுக்கு நான் 5 லட்ச ரூபாய் தருகிறேன் எனக் கூறியிருந்தார். பாஜக பிரமுகரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெறுப்பூட்டும் வகையில் பேசிய குல்தீப்பை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி, படாவன் மாவட்ட பாஜக தலைவர் ஹரீஷ் சாக்யா சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து சாக்யா கூறுகையில், குல்தீப்பின் கருத்து அவரது தனிப்பட்டதாகும். இதில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.கட்சி அலுவலகத்துடன் கலந்தாலோசிக்காமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்' என்றார் ஹரீஷ் சாக்யா.












Click it and Unblock the Notifications