ஷாக் ஆன அதிகாரிகள்.. மோடியின் ஹெலிகாப்டரை மொய்த்த ‘கருப்பு பலூன்கள்’ - ஆந்திராவிலுமா?
அமராவதி: ஆந்திராவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரை சுற்றி 50 க்கும் மேற்பட்ட கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆந்திரா பயணம்
இந்த செயற்குழுக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவுக்கு வருகை தந்தார். அங்குள்ள பீமாவரத்தில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூர் சீதாராம ராஜுவின் 125 வது பிறந்தநாள் விழாவில் அவர் கலந்துகொண்டார். அங்கு அவரது 30 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

காங்கிரஸ் போராட்டம்
அங்கிருந்து கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்வது பயண திட்டமாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு வருகை தர எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கன்னாவரம் விமான நிலையம் அருகே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

கருப்பு பலூன்கள்
அப்போது பயண திட்டத்தின்படி ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் புறப்படவுடன் தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் கைது
50 க்கும் அதிகமான அந்த கருப்பு பலூன்கள் பிரதமரின் ஹெலிகாப்டரை மொய்க்கும் அளவுக்கு அருகில் சென்றன. இந்த வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் கவுசல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications