கருப்பு பணம்: ஜேத்மலானியுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் சு.சாமி
டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் உதவி செய்ய முன்வந்துள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கை குறித்து பதில் அளிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கருப்பு பணத்தை மீட்பது குறித்து லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட மசோதா வலுவானதாக இல்லை. அதை வைத்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க முடியாது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு உதவி செய்ய எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் சாமியின் கோரிக்கை குறித்து பதில் அளிக்குமாறு சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தொடர்ந்த பொதுநல வழக்கின்பேரில் தான் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கருப்பு பணத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் சாமியும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கருப்பு பண விவகாரம் குறித்து சாமி அளிக்கும் ஆதரவு மற்றும் தகவல் ஆகியவற்றை வரவேற்கிறேன். என் வயதான காலத்தில் கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டாளியை எதிர்பார்த்த நேரத்தில் சாமி வந்துள்ளார் என்றார்.
கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடுவது, மும்பையில் உள்ள சுவிஸ் வங்கி கிளை அதிகாரிகளை கைது செய்து கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயரை அளிக்குமாறு வலியுறுத்துவது உள்பட நான்கு முறைகளை சாமி பரிந்துரைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications