சூப்பரப்பு.. வரி ஏய்ப்பாளர்களிடமிருந்து அரசுக்கு கிடைத்தது ரூ.30,000 கோடி.. அருண் ஜேட்லி பேட்டி
டெல்லி: மத்திய அரசின் வரி ஏய்ப்பு தடுப்பு திட்டத்தால் ரூ. 65,250 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு செய்தோர் தண்டனையிலிருந்து தப்பிக்க அரசு கொடுத்த 4 மாத வாய்ப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை வந்துள்ள கருப்பு பணம் குறித்த தகவலை இன்று அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரிகள் இன்னமும் வந்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்து கொண்டிருப்பதால், இந்த பணத்தின் மதிப்பு இன்னும் உயர வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 1ம் தேதி அரசு அறிவித்த வரி ஏய்ப்பு தவிர்ப்பு திட்டத்தின்படி, வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு செப்டம்பர் 29ம் தேதிவரை தங்களை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவ்வாறு உண்மையை தெரிவிப்போருக்கு தண்டனையோ, அபராதமோ, செஸ் விதிப்போ கிடையாது என அறிவிக்கப்பட்டது.
எனவே இந்த சலுகைகள் போக அரசுக்கு கிடைக்கப்போகும் வரி வருமானம், ரூ.30 ஆயிரம் கோடி. மூன்று தவணைகளில் வரி ஏய்ப்பாளர்கள் இந்த தொகையை அரசுக்கு செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை முடிவடையும். 25 சதவீத தொகையை அப்போது செலுத்தலாம். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 2வது தவணையாக மேலும் 25 சதவீத வரியை செலுத்த வேண்டும். பாக்கி தொகையை அடுத்த வருடம் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வரி ஏய்ப்பாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறை தண்டனை விதிக்குமளவுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வரி ஏய்ப்பாளர்களுக்கு அரசு நெருக்கடி கொடுத்து இவ்வளவு தொகையை, அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications