தானே ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: 5 பேர் பலி, 70 பேர் காயம்
தானே: தானேவில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலியாகினர், சுமார் 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோம்பிவாலியில் ஹெர்பரட் பிரவுன்-ஆச்சார்யா ரசாயன ஆலை உள்ளது. அந்த ஆலையில் இன்று காலை 11 மணிக்கு பாய்லர் வெடித்தது. இதையடுத்து ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் பணியாற்றிய 5 பேர் பலியாகினர். மேலும் 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இந்த விபத்தில் அப்பகுதியில் இருக்கும் 6 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

காயம் அடைந்தவர்கள் எய்ம்ஸ், ஆர்.ஆர். மருத்துவமனை, சாஸ்திரிநகர் மருத்துவமனை மற்றும் சிவம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசாயன ஆலை விபத்தால் தோம்பிவ்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ நடந்த இடத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் டாக்டர் மகேந்திர கல்யாண்கர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications