ஆற்றை நீந்திக் கடந்து சாதனை படைத்த பார்வையற்ற சிறுவன்.. கேரளாவில்
கொச்சி: கேரளாவில் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளான் 12 வயது சிறுவன்.
அந்த சிறுவனுக்குத் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 8 வது வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன் முழுமையாக பார்வையற்றவன் ஆவான்.
சிறுவன் ஆற்றை நீந்திக் கடந்தபோது நூற்றுக்கணக்கானோர் கூடி அவனைப் பாராட்டி ஊக்குவித்தனர்.

சாதனைச் சிறுவனான எம்.எஸ். நவனீத், தனது 4 வயதில் கண் பார்வையை இழந்தான். முழுமையாக பார்வை பாதிக்கப்பட்டாலும் கூட சாதனைகள் படைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவனாக இருந்தான். இதுவே இன்று அவனை ஒரு சாதனையாளராக மாற்றியுள்ளது.
அலுவா ஆசிரமம் அருகே பெரியாறில் குதித்து நீந்தத் தொடங்கிய சிறுவன் கடும் குளிர் நீரையும் பொருட்படுத்தாமல், மழையையும் பொருட்படுத்தாமல், அருமையாக நீந்திச் சென்று சாதனை படைத்தான்.
பெரியாறு ஆற்றை பார்வையை இழந்த சிறுவன் ஒருவன் நீந்திக் கடந்தது இதுவே முதல் முறையாகும் என்பதால் புதிய சாதனையாக இது மாறியுள்ளது.
நவனீத், 2 மாதங்களுக்கு முன்புதான் நீச்சல் கற்கவே ஆரம்பித்தான். நீச்சல் கற்க ஆரம்பித்த 12வது நாளிலேயே அவன் தேர்ந்த நீச்சல் வீரராக மாறியுள்ளான். அனைவரையும் அதிசயிக்க வைத்தான். தனது பயிற்சியாளர் சஜி வலசெரில் உதவியுடன் இந்த சாதனையை படைத்துள்ளான்.












Click it and Unblock the Notifications