தானே அருகே படகில் ஓட்டை: உயிர் பிழைக்க நீரில் குதித்த தந்தை, மகன் பலி
மும்பை: தானே அருகே படகில் ஓட்டை விழுந்ததையடுத்து நீரில் குதித்த தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் டிட்வாலாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றனர். அவர்கள் கோவில் அருகே உள்ள குளத்தில் படகு சவாரி செய்தனர்.
அப்போது அவர்கள் சென்ற படகில் ஓட்டை விழுந்து நீர் புகுந்தது. இது குறித்து படகு கழக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் மீட்பு குழு வருவதற்குள் படகில் இருந்த 7 பேரும் நீரில் குதித்துவிட்டனர். நீரில் குதித்தவர்களில் 5 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். ஆனால் மேத்ரேஜாஸ்(42) மற்றும் அவரது மகன் அஜய்(12) ஆகியோரை மீட்பு குழுவினரால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை.
சுமார் 2 மணிநேரம் தேடிய பிறகு தந்தை, மகனின் சடலங்கள் தான் கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து டிட்வாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும், பராமரிக்கப்படாத படகில் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து படகு கழக தலைவர் சகாரா சான்ஸ்தா மற்றும் அதன் இயக்குனர் நரேந்திர ஜாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications