அசாம் மாநிலத்தில் ராணுவ முகாம் அருகே குண்டு வெடிப்பு.. பொறுப்பேற்றது ULFA-I ஆயுதக்குழு!
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ராணுவ முகாம் அருகே இன்று மாலை பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள ராணுவ முகாம் அருகே இன்று மாலை குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லிச்சுபாரி ராணுவ முகாமின் பிரதான வாயில் உடனடியாக மூடப்பட்டது.

உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்தில் மனித உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவான அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA-I) பொறுப்பேற்றுள்ளது.
அசாம் மாநிலத்தில், கடந்த மாதமும் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. நவம்பர் 22 அன்று, டின்சுகியா மாவட்டத்தில் உள்ள டிராக்கில் உள்ள இராணுவ முகாமின் வாயில்களுக்கு வெளியே ஒரு கையெறி குண்டு வெடித்தது. கடந்த டிசம்பர் 9ஆம் தேதியும் கையெறி குண்டு வீசப்பட்டது. ஜாய்சாகரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாம் அருகே குண்டு வெடித்தது. தடை செய்யப்பட்ட ஆயுதமேந்திய அமைப்பான ULFA-I இதற்கு பொறுப்பேற்றது.
அதோடு, அசாம் காவல்துறையை தனது பூர்வீகச் சொத்தாகக் கருதும் மாநிலத்தின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜிபி சிங்கிற்கு இந்த குண்டுவெடிப்புகள் ஒரு எச்சரிக்கை என்று அந்த அமைப்பு கூறியது. இந்நிலையில், மீண்டும் அங்கு குண்டு வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications